கொழும்பு: இலங்கையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஜிதா செனரத்னேவுக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபயவின் அண்ணன் மகிந்த ராஜபக்சே. முன்னாள் அதிபரான ராஜபக்சே தற்போது இலங்கை பிரதமராக உள்ளார். இவர் அதிபராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ரனவாகா மற்றும் ரஜிதா செனரத்னே. தற்போது இவர்கள் எதிர்க்கட்சி எம்பிக்களாக உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரனாவாகா சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் மகிந்த ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடந்த `வெள்ளை வேன் கடத்தல்’ தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரஜிதே செனரத்னே கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோத்தபய அதிபராக பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்படும் இரண்டாவது எதிர்கட்சி எம்பி ரஜிதா செனரத்னே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரஜிதா செனரத்னேவுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கொழும்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ேநற்று இருநபர் ஜாமீனில் ரூ.5 லட்சம் பிணைய தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து ரஜிதா செனரத்னேவுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டு தூதரக பெண் ஊழியர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தன்னை மர்மநபர்கள் கடத்தியதாகவும் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கைவாசிகள் குறித்த தகவல்களை கேட்டு தன்னை அந்த கும்பல் தாக்கியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 16ம் தேதி சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்னியர் கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.